Wednesday, November 12, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 12 11 14

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் நான் பிறந்த ஊர். கடந்த வார இறுதியில் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சி. எல்லாம் முடிந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன் சித்தப்பா வயலைப் பார்த்துவிட்டு வரலாம் என சென்றேன்.

வயலுக்கு போகும்  வழியில் முன்பெல்லாம் ஒரு கடை இருக்காது. இப்போது ஆச்சரியமாய் ஒரு டாஸ்மாக் முளைத்திருந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் முக்கிய இடத்தில் டாஸ்மாக் இருந்ததால் அதை மாற்றக் கோரி ஊர் மக்கள் சாலை போராட்டங்கள் செய்திருக்கிறார்கள். அதனால் இங்கே மாற்றப்பட்டுள்ளதாம்.

தற்போது இதன் விளைவாய், குளக்கரையில் பட்டப்பகலில் ரசனையாய் அமர்ந்து மிக்ஸிங் செய்து குடித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க முடிந்தது. டாஸ்மாக்கை சுற்றி நான்கைந்து சிக்கன் தள்ளுவண்டிகள், மிக்சர் பாக்கெட்டுகள், வாட்டர் பாக்கெட் சகிதம் ஒரு சைக்கிள் கடை என ரம்மியமாய் இருந்த வயல் பகுதிகள் ரம்மாய் காட்சியளிக்கிறது.

ஆறு இருந்த இடத்தை சுற்றி நாகரிகம் வளர்ந்தது போல இனி ஆட்களே இல்லாத எந்த பகுதியாவது டெவலப் ஆக வேண்டும் என்றால் அதில் ஒரு டாஸ்மாக்கை வைத்து விட்டால் போதும் போல.

எந்த ஆங்கிளில் அழகாக தெரிகிறேனோ அதில் ஒரு கிளிக் பண்ணிடுங்க என்றால், இந்த ஷாட்லதான் மாப்ள பார்க்கிற மாதிரி இருக்க என எடுத்து தருகிறார்கள் நண்பர்கள். எவ்வளவு பயிற்சி இருந்தாலும் ஊர் பசங்க கிண்டலை சமாளிப்பது  கஷ்டம்.
•••

ஊருக்கு கிளம்ப வேண்டி இருந்ததால் இன்டர்ஸ்டெல்லார் காலை 9 மணி காட்சி வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்க்க வேண்டிய நிலை. பேஸ்புக் பேஜில் அவர்கள் சொன்னதுபோல் சப் டைட்டில் காண்பிக்கப்படவில்லை. சப் டைட்டில் கூட பரவாயில்லை. மெயின் டைட்டிலையே காண்பிக்கவில்லை. ஏதேதோ டிரைலர்கள் ஓடிக் கொண்டிருக்க படாரென கதாநாயகன் அவரது குழந்தைகளுடன் காரோட்டிக் கொண்டு செல்லும் காட்சியில் படம் ஆரம்பித்தது.  டென்ட்டுக் கொட்டகையில் கூட எனக்குத் தெரிந்து இப்படி நடந்தது இல்லை. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா என அவர்களது பேஸ்புக் கணக்கிற்கு கேள்வி அனுப்பினால் இதுவரை பதில் இல்லை!

மற்றபடி படம் சுமாராக புரிந்தது. வீட்டிற்கு வந்து கதையை தேடி படித்த பின்தான் பரவாயில்லை படம் நல்லாத்தான் இருக்கு என்ற முடிவுக்கு வர முடிந்தது.

ஆனால் இன்னமும் எனக்கு ஸ்பேஸ் பிக்ஷன் என்றால் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய கண்சிமிட்டும் விண்மீன்கள் நாவல்தான். அதற்கு முன்னால் இன்டர்ஸ்டெல்லார் எல்லாம் சுமார்தான்.

•••

சரக்கடிக்கிறவங்களுக்கு கூட சங்கம் இருக்கு. ஆனா எங்க ஆளுங்களைத்தான் ரத்தம் குடிக்கிற காட்டேரி கணக்கா ஓட்டுறாங்க. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு 'கேண்டி கிரஷ் விளையாட்டு மேம்பாட்டு மையம்' ஆரம்பிக்கிறதுதான். இருள் விலகட்டும்!

•••

டாங்கா மாரின்னு அனேகன்ல ஹாரிஸ் போட்ட பாட்டு கேட்டுட்டு இருந்தேன். "கொஞ்ச நாளா இந்த நாக்க முக்க பாட்டை போட்டு அலற விடாம இருந்த.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா...?" என கிச்சனில் இருந்து அம்மா உடனே கத்துறாங்க. 
# சாரிங்க பாஸ் வழக்கம்போல எல்லா தரப்பு சாட்சியும் உங்களுக்கு எதிராவே இருக்கு.

•••

கோபியின் வீடியோ வெளியான பின்னர் இனியும் கத்தி தானே செய்த இட்லி என முருகதாஸ் சொன்னால் அதை சட்னி கூட நம்பாதுதான். அதற்காக இன்னமும் அவரை துவைத்து தொங்கப் போட்டு கொண்டிருப்பது நியாயமாக படவில்லை. இதற்கு முன்னால் அவரே யோசித்து சமூகத்திற்கு சொல்லியிருக்கும் கருத்துக்களையும் அதனால் மக்கள் அடைந்த பலனையும் யோசித்து பாருங்கள்.

உதாரணத்திற்கு துப்பாக்கியில் கூட தண்ணீர் மேலாண்மை குறித்து அவர் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ஒரு இரவு கடற்கரையில் படுத்து தூங்கி எழுந்ததும் மறுநாள் காலை டீ ஷர்ட்டை உள்புறம் வெளிபுறமாய் திருப்பி மாற்றி போட்டுக் கொள்வார் விஜய். இதனை நாம் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் துவைப்பதற்காக ஆகும் தண்ணீர் எவ்வளவு சேமிக்கப்படும் என யோசித்து பாருங்கள்.!

நான் சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பனியன் போடுறேன். என் ஐடியாவை தாஸ் சார் சுட்டுட்டாருன்னு யாராச்சும் கிளம்புனீங்க அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.

•••

'Chill morning.. Enjoying hot coffee @Cafe day' என மொபைலில் ஸ்டேட்டஸ் போடுகிறார் ஷேர் ஆட்டோவில் அருகில் இருக்கும் இளம்பெண். இல்ல... நான் கேக்குறேன்.. என்ன இது? பேஸ்புக்குக்குன்னு ஒரு தர்மம், நியாயம் இல்ல..? Withனு போட்டு பக்கத்துல இருக்க என் பேரை டேக் பண்ண வேணாம்?

Tags : Kumbakonam Nachiyar Koil, Tasmac, Interstellar, Kansimitum vinmeengal endamoori virendranath

3 comments:

சாருஸ்ரீராஜ் said...

சில விசயம் முகபுத்தகத்தில் படித்ததினால் சுவாரசியம் இல்லை. ஆனால் முடிவுல ஒரு டச் இருந்தது

கரந்தை ஜெயக்குமார் said...

நாச்சியார் கோயில் பல முறை வந்திருக்கின்றேன் நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான பதிவு! நன்றி!

91 club