Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Friday, June 3, 2016

இறைவி - புரிந்ததும் புரியாததும்



"ஆமா.. படம் போனீங்களே எப்படி இருந்துச்சு.. நல்லா இல்லையா...?"

"அப்படிலாம் ஒண்ணும் இல்லையே ஏன் கேட்குற.."

"இல்ல.. வழக்கமா படத்துக்கு போயிட்டு வந்தா.. படம் நல்லா இருந்தா தங்கு தங்குன்னு குதிப்பீங்க.. மொக்கையா இருந்தா அமைதியா இருப்பீங்க.. இப்ப வந்து பத்து நிமிஷமா வாயே திறக்கலையே அதான் கேட்டேன்."

"ஹே.. சே... சே.. அப்படி சொல்றியா,,, படம் மொக்கைலாம் இல்ல.. நல்ல கதையுள்ள படமே வர்றது இல்லன்னு சொல்றாங்கல்ல.. அதுக்கு நல்ல துவக்கமா.. பேய், காமெடி டெம்ப்ளேட் படங்களில் இருந்து மாறுதலா ஹெவியா ஒரு நல்ல டிராமா மூவியா இறைவியை எடுத்துக்கலாம்.."

"அப்போ ரொம்ப நல்லா இருக்கா,,"

"அதுக்குன்னு அப்படியும் சொல்லிட முடியாது... அங்கங்க கொஞ்சம் ஸ்லோ, வயலன்ஸ்ன்னு சில மைனஸ்களும் இருக்கு.."

"அப்போ ஆவரேஜா.. ஒருவாட்டி பார்க்கலாம் வகை படமா.."

"நோ.. நோ..  இந்த படத்தை விமர்சனம்லாம் பண்ண மனசு வரலை... இது ஒரு அனுபவம்.. நல்ல பவர்புல் காஸ்டிங், ஸ்டிராங்கான கதை, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பார்க்கிற மனநிலை இருந்தா நல்ல ரசனையான புராடக்ட் இந்த படம். பொதுவா நல்லா இருக்குன்னும் சொல்ல முடியாமா மோசம்னும் சொல்ல முடியாத வகை படங்களுக்கு வேணா ஆவரேஜ், ஒன் டைம் வாட்ச்னு அடிச்சிவிடலாம்... ஆனா இந்த படத்தை கூட்டத்தோட கூட்டமா அப்படி சொல்ல முடியாது."

"வேற எப்படி சொல்லலாம்..?"

"அதான் புரியாம பத்து நிமிஷமா யோசிட்டு இருக்கேன்!"

"அடப்பாவமே...  அப்போ கதையையாச்சும் சொல்லுங்க எனக்காச்சும் புரியுதா பார்ப்போம்.."

"அதை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரும்மா.."

"யாரு..??"

"கார்த்திக் சுப்புராஜ்"

"அதாரு.,..??"

"படத்தோட டைரக்டர்"

"உங்கக்கிட்ட எப்போ சொன்னாரு... உங்க பேஸ்புக் பிரண்டாக்கும்.."

"இதென்னடா சோதனை..  பொதுவா பிரஸ் நோட்ல சொல்லியிருக்காரும்மா.."

"யாரோ எவரோ பிரஸ்ல சொன்னதுலாம் ஞாபகம் இருக்கு.. படம் முடிஞ்சு நான் என்னென்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்.. அதுல எத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க பாருங்க.. இத்தனைக்கும் காலையில கழுதை மாதிரி கத்தி கத்தி அனுப்பினேன்... அஞ்சு பொருள் சொன்னா.. அதுல நாலு பொருள் காணும்.. "

"ஐயாம் வெரி சாரிம்மா.. இறைவி பார்த்தா ஒரு வாரமாச்சும் மனசு பாதிக்கும்னு சொன்னாங்க.. அதான் படம் தந்த பாதிப்புல மறந்துட்டேன் போல..."

"யாரு சொன்னாங்க.."

"அவங்களே மேக்கிங்-வெப் சீரிஸ்ல சொல்லிக்கிட்டாங்க..."

"ஏங்க படுத்துறீங்க..  எல்லா படமும் பார்க்க மாட்டேன்.. இது சயின்ஸ் பிக்ஷன் படம் சூர்யா நடிச்சது.. இது ஜிகர்தண்டா எடுத்தவரு படம்.. இது அப்படியாக்கும.. ஆணை பூனைன்னு ஒவ்வொரு படத்துக்கும் என்னத்தையாவது சொல்லிட்டு போக வேண்டியது.. சினிமான்னா எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சொல்ற பொருள் வாங்கிட்டு வர மட்டும் மறந்து போயிடுது இல்ல... சொல்றதை காதுல வாங்குறதில்லை.. என்ன பார்த்தா எப்படித்தான் தெரியுதோ.. ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்ல.."

"அய்யோ.. இப்ப புரிஞ்சிடுச்சு.... இறைவிலயும் இதைத்தான்..."

"அடிங்ங்ங்ங்ங்....."

Friday, February 13, 2015

அனேகன் - ஐந்து நட்சத்திரங்கள்



"இவனை தூக்கிட்டு வர்றதுக்கு மூணு பேரா?" என தனுஷ்ஷை குறித்து ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்.  உண்மைதான். அவர் உருவம் அப்படி. ஆனால் தனுஷின் ஆற்றலை தனியாக டவுன்லோட் செய்து வைத்தால் முன்னூறு பேர் வந்தாலும் தூக்க முடியாது போல் இருக்கிறது. மூன்று வெவ்வேறு கால நிலை காதலனாக தனுஷ்.  மூனா ரூனா, அஷ்வின், காளி என கிரியேட்டிவ்வாக எதையாவது செய்யத் துடிக்கும் கலைஞனுக்கு செம ட்ரீட்டான ப்ராஜக்ட். தனுஷ் எப்படி செய்திருக்கிறார் என ஆராய்ந்து எழுத முடியாது. பம்மல் வ்வ்வே சம்பந்தம் சொல்வது போல அப்படியே அனுபவிக்க வேண்டியதுதான்.

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் என குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் வரிசையில் கே.வி.ஆனந்த்.  பொதுவாகவே காதலை கசக்கி பிழியும் படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. அட.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்கய்யா என்பது போல் இருக்கும். "இதுவரை முழுமையான காதல் படங்கள் நான் செய்ததில்லை..  அனேகனில் பண்ணியிருக்கேன்"  என கே.வி.ஆனந்த் ஒரு பேட்டியில் சொன்னபோது,  'என்னடா.. மாற்றான் தந்த சறுக்கலில் இவரும் இப்படி ஆயிட்டாரே..  படம் காதல் கத்திரிக்காய் என ரொம்ப சிம்பிளா இருக்கும் போலிருக்கு' என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது பேட்டியில் 'க.மொ.வி.' இறக்க விரும்பாமல் தன்னடக்கமாய் இருந்துவிட்டு படத்தில் அதை செய்திருக்கிறார்.

கதையே கதாநாயகியை சுற்றி நகர்வதால் அழகு பதுமையாய் மட்டும் அல்லாமல் நடிக்கவும் செய்யும் பெண் வேண்டும். எங்க பாஸ் கண்டுபிடிச்சீங்க உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு  அசத்தும் அமைராவை?  மூன்று கால நிலைகளிலும் செம க்யூட் அன்ட் ஸ்வீட். தொடர்ந்து ஐ, இசை இரண்டு படங்களிலும் வெளி மாநில/நாட்டு கதாநாயகிகளின் மொழிக்கு பொருந்தும் அல்லது பொருந்த வைக்கப் பட்டிருக்கும் உதட்டசைவு தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யம்.

கனக்ஷன்ஸ் ஜெகன் ஒரு படத்தில் இருந்தால் அந்தப்  படத்தை சென்சாருக்கு அனுப்பாமலே 'ஏ' சர்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற பொதுவிதி இந்த படத்தில் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு வசனங்களை தவிர அவரது வால்யூமை குறைத்தே வைத்திருக்கிறார்கள்.

முதல் பாதி கார்த்திக் சூப்பர். இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம்  சூப்பராக இருந்திருக்கலாம். 'இசை' போன்ற ஒரு ஸ்கிரிப்டில் சத்யராஜ் துவம்சம் செய்தது போல் அனேகனில் வாய்ப்பு இருந்தும் கார்த்திக் கொஞ்சம் குறைவாகவே செய்திருக்கிறார். இல்லை அவர் டிசைனே அப்படித்தானா தெரியவில்லை.

ஓரு பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை தியேட்டர் இடைவிடாமல் அதிர்ந்து கொண்டே இருந்தது கடைசியாய் எப்போதென ஞாபகம் இல்லை. டாங்கா மாரியில் ஸ்பீக்கரை விட ரசிகர் குரல் தெறிக்கிறது. வெறும் குத்தாட்ட பாடலாக இல்லாமல் அதற்குள்ளும் கதையை வைத்ததற்கு ஸ்பெஷல் சபாஷ். ஆனால் அதற்கடுத்தாய் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  'ரோஜா கடலே' பாடலை அப்படி கிராபிக்ஸ் பேக்கிரவுண்ட் லொக்கேஷன்களை வைத்து சுமாராய் காண்பித்தற்கு அந்த சபாஷை திரும்ப வாங்கி கொள்ள வேண்டும். ஹாரிஸ் இவ்வளவு அழகாக பாடல் போட்டும் இப்படி பண்றீங்களேம்மா...?

முதல் அரைமணி நேரம் அறுபதுகளில் பர்மா எபிசோட், பின்னர் இடைவேளை வரை இன்றைய காலகட்டம். இடைவேளை முடிந்ததும் எண்பதுகளின் சென்னை, பின்னர் இன்றைய நிகழ்வு என திறமையாக கட்டமைக்கப்பட்ட இந்த சயின்ஸ், பேன்டஸி, லவ் சப்ஜெக்ட், தமிழ் எழுத்துலகில் மின்னி பின் திரையிலும் மின்னத் தெரிந்த வெகு சொற்பமானவர்கள் பட்டியலில் சுபாவின் பெயரும் எப்படி இடம் பெற்றது என்பதற்கு தரமான சான்று.

தமிழுக்கு கொஞ்சம் புதிரான புதிதான கதை, அடுத்தடுத்து பரபரப்பாய் நகரும் காட்சிகள், அருமையான ஆழமான காதல் எபிசோட்ஸ், ஆங்காங்கே டிவிஸ்ட்ஸ் அன்ட் டர்ன்ஸ், நடிகர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸ், துள்ளலான இசை இவை எல்லாவற்றையும் சிறப்பாக அசெம்பிள் செய்யத் தெரிந்த கெட்டிக்கார இயக்குனர் என ஒரு சிறப்பான கமர்ஷியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது அனேகன்.

2 மணி 40  நிமிடங்களும் கொடுத்த ரூ.120க்கு ரூ.1000 கிடைத்தது போல் ஒரு திருப்தி. இது போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட்டிற்கு இண்டு இடுக்கு குறைகளை வைத்துக் கொண்டு மூணரை, நாலு ஸ்டார்கள் தருவது பாவம். நான் தருகிறேன் கே.வி.ஆனந்த்... இந்தாங்க பிடிங்க 5 ஸ்டார்ஸ்  ★★★★★



வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் | ஃபீலிங்ஸ்
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

Tags: Anegan, Anegan Review, KV Anand, Dhanush, Amyra, Harris Jayaraj, AGS Productions

Saturday, February 7, 2015

என்னை அறிந்தால் | ஹாட்ரிக் என்னாச்சு?



அஜித்திற்கு ஹாட்ரிக் வெற்றி நிகழுமா என்பதும் கவுதமிற்கு ஹாட்ரிக் தோல்வி தவிர்க்கப்படுமா என்பதும் 'என்னை அறிந்தால்' படத்தின் ரிசல்ட்டை பொறுத்து இருந்தது.

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் என கடைசி இரண்டு படத்தில் சறுக்கல். மேலும் 'கவுதம் சரியா ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலை' என்கிற சூர்யாவின் ஸ்கூல் மிஸ் கம்ப்ளெயின்ட். ஆகவே எதுவும் ரிஸ்க் எடுத்து சொதப்பி விடக்கூடாது. என்ன பண்ணலாம்..? சறுக்கிய ந.நவின் ஓவர்டோஸ் காட்சிகளோ, நீ.எ.பொ படத்தின் டோஸே இல்லாத காதல் காட்சிகளையோ அறவே தவிர்த்து விட வேண்டும். பிறகு?

பெயரைத் தந்த வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தான்டி வருவாயா, வாரணம் ஆயிரம் படங்களின் ரசிக்கப்பட்ட போர்ஷன்களை எடுத்துக் கொண்டு அதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர் எல்லாரையும் பொருத்தி  சோளிகளை குலுக்கி போடுவது போல போட வேண்டியதுதான்.

ஆனாலும் அப்படி போடப்பட்ட இந்த 'என்னை அறிந்தால்' குலுக்கல் அழகாகவே விழுந்திருப்பது ஆச்சரியம். வெட்டுப்படாமல் தப்பிக்கவோ பழம் பழுக்கவோ ஆட்டத்தில் தேவைப்படும் நேரத்தில் விழுந்த தாயம் போல, கவுதமிற்கு மீண்டும் நற்பெயரை இந்த படம் நிச்சயம் வாங்கி தரும். (அதுக்காக அடுத்த படத்துக்கும் சோளியை கையில எடுத்து எங்க சோலியை முடிச்சுப்புடாதீங்கப்பு.)

அனுஷ்காவில் கதையை ஆரம்பித்து, அப்படியே அஜித்தை இணைத்து, அங்கே அருண் விஜய்யை கொண்டு வந்து பர பரவென மிக சுவாரஸ்யமாய் துவங்குகிறது படம். அஜித்தின் அந்த மெல்லிசான கோடு பிளாஷ்பேக்கை சொல்லி அவர் அந்தப் பக்கம் போய்விட்டார் என அருண் விஜய் உடனான கேங்ஸ்டர்  எபிசோடை தந்து சடாரென இந்தப் பக்கத்திற்கு ஷிப்ட் அடிப்பதில் இன்னும் கலக்குகிறது ஸ்கிரிப்ட்.

அதன் பின்பு திரிஷா, அவருடனான காதல், இழப்பு, பழிவாங்கல் என இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை. அதன் பின்பு பாசம், பயணம், ஆக்ஷன் என சென்று மீண்டும் அனுஷ்காவில் வந்து முன்பாதியில் விட்ட இடத்தில் அழகாக இணைகிறது. இதன் பின்புதான் பெரியதாக ஒரு டிவிஸ்ட்டோ சஸ்பென்ஸோ இல்லை. ஆனாலும் சேசிங், ஷார்ப் வசன மோதல் என போரடிக்காமல் சென்று சொதப்பாமல் முடிவது ஆறுதல்.

சும்மா நின்றாலே ரசிர்களுக்கு ஹேன்ட்ஸமாக அருள் பாலிப்பவர் அஜித். இதில் கவுதமின் ஆராதனையில் எப்படி இருப்பார்? கேங்ஸ்டர், ஐ.பி.எஸ், சால்ட் அண்ட் பெப்பர் என மூன்று தோற்றங்களிலும் அவ்வளவு லவ்லியாக இருக்கிறார். ஆசிஷ் வித்யார்தியிடம் தன் வீட்டில் கோபப்படும் இடம் ஆகட்டும், மேத்யூ கூட்டத்தை ஒழிக்க துப்பாக்கி எடுக்கும் இடம் ஆகட்டும், லுங்கியை கட்டிக்கொண்டு நாக்கை மடித்து ரசிகர்களுக்காக செம குத்து குத்தும் இடம் ஆகட்டும், பள்ளி வாகனத்தை மறித்து பெண்ணை கூட்டிக் கொண்டு பயணிப்பது ஆகட்டும்..  வழக்கம் போல தொண்டை கிழிய 'தல.. தல' என கத்தி மாளாமல் அமைதியாய் அதே உற்சாகத்துடன் அஜித்தை ரசிக்கும் விதத்தில் ரசிகர்களுக்கு வித்யாசமான  ட்ரீட்.

திரிஷாவிடம் புரபோஸ் செய்யும் அந்த ரொமான்ஸ் காட்சியில் மட்டும் 'எனக்கு இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்லைப்பா' என்பது போலவே நடித்திருக்கிறார். இது வலிந்து செய்யப்பட்டதாக இருக்கலாம். (இந்த அம்சம் அன்புச்செல்வனில் இருந்தும்  ராகவனில் இருந்தும் சத்யதேவை வேறுபடுத்தி காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.)  *இப்படியும் பாஸிட்டிவ்வா சொல்லிக்கலாம்.

"யாராச்சும் பத்த வைங்கடா.. நான் எப்படி வெடிக்கிறேன் பாருங்க.."  என்பது போல் இருக்கும் சரவெடியாய் அருண்விஜய். பாண்டியா, அமுதன்-இளமாறன் போன்றவர்களின் குரூரத்தினை வெளிப்படுத்தாத ஆனால் அதே நேரம் நட்பை நம்பி ஏமாந்துவிட்ட வெறியுடன் தரமான வில்லனாக வெடித்திருக்கிறார். ஒரு நடிகர் கவுதமின் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை விட வேறென்ன பாராட்டு பெற்று விட முடியும்? பட்டாசு பாஸ்!

திரிஷாவா இது...? மை காட். பிளெயின் காட்டன் சாரியில் ஜெஸ்ஸியாக கவுதம் கைவண்ணத்தில் மின்னியவர்.. அப்படியே நேரெதிராய் சர்வ அலங்காரத்துடன் கண்களில் மையுடன் நடனத் தாரகையாக  ஜொலிக்கிறார். திரிஷாவுடன் ஒப்பிடுகையில் வெயிட்டான ரோல் அனுஷ்காவிற்கு இல்லை. கொடுத்த ரோலை செய்திருக்கிறார். "என் ரோலை வேணும்னா அவங்க பண்ணட்டும்" என கவுதமிடம் அனுஷ்கா சொன்னதாக செய்திகள் வந்ததே. அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது. (வெவரம் மேடம் நீங்க!)

மியூசிக்கல் ப்ளே பார்த்திருக்கிறீர்களா.. பாடிக்கொண்டே முழுக் கதையையும் நடித்து காட்டிவிடுவார்கள். ஏறக்குறைய என்னை அறிந்தால் முதல் பாதி ஒரு லவ்லி மியூசிக்கல் ப்ளே. ஹாரிஸ் விளையாடி இருக்கிறார். சூப்பர் பாஸ்! தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை போல கொஞ்ச நாளாவது ஹாரிஸை யாரும் கலாய்க்க மாட்டார்கள் என்கிற அளவிற்கு மனிதர் உழைத்திருக்கிறார். ('நான் முன்ன மாரி இல்ல இப்போ.. ரொம்போ மாறிட்டேன்'னு அனேகன்ல ஒரு லைன் வருதே.. செம டைமிங் பஞ்ச் பாஸ் அது..! ஆஹா நானே கலாய்ச்சிட்டேனே.. மன்னிச்சூ மன்னச்சூ..)

‘பில்லா 2வில் விட்டது. ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொல்லி அடித்துவிட்டு, மூன்றாவதாக அஜித் 'என்னை அறிந்தால்' படத்தை தந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் அடித்தது. அடுத்ததாக நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் இரண்டிலும் சறுக்கிவிட்டு  இப்போது கவுதம் 'என்னை அறிந்தால்' படத்தை சிறப்பாக தந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்திருக்கிறார்.

விவரிக்க முடியாத விஷுவல்ஸ், ஜில்லென்ற இசை, பற்றி எரியும்  மோதல், பசுமையான காதல் என 'என்னை அறிந்தால்' தமிழ் சினிமாவின் உன்னதம். இங்கிலீஷ்ல சொன்னா எக்ஸலென்ட்!

ஏன் தமிழ், இங்கிலீஷ்ல சொல்றோம்னா... கவுதம் படம்னா எல்லாம் அப்படித்தான்!

Sunday, February 1, 2015

இசை


எஸ்.ஜே.சூர்யா  மூளையின் ரசிகன் நான். வாலி, குஷியில் அவரது பிரில்லியன்ஸ் வெகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நியூவில் ஒரு வித்யாசமான பேன்டஸி சப்ஜெக்டையும், அன்பே ஆருயிரேவில் நினைவலைகளை கதை சொன்ன தைரியமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு இப்போது இசையின் டிரைலரும் சேர்ந்துக்கொண்டு ஈர்ப்பை அதிகரிக்க, முதல் காட்சிக்கு சென்றிருந்தேன்.

வாலி, குஷியில் கடைபிடித்த இலைமறை தரத்தை ஏனோ நியூவிலும், அ.ஆவிலும் இழந்துவிட்டிருந்தார். பேமிலி ஆடியன்ஸ் முகம் சுளிக்கும் வண்ணம் காட்சிகளையும் வசனங்களையும் அதிகரித்திருந்தார். இசையில் அதேபோல் காட்சிகளும் வசனங்களும் இருக்கிறது. ஆனால் முகம் சுளிக்கும் வண்ணம் இல்லை.

வழக்கமான தனது பாணியில் கதையின் ஒன் லைனை சொல்லிவிட்டே இசையையும் ஆரம்பிக்கிறார் எஸ்.ஜே.! இம்முறை வாலி அளவிற்கு இல்லாவிட்டாலும்  அதைப் போன்ற ஒரு நல்ல ரொமான்டிக் திரில்லரை தந்திருக்கிறார்.

முதல் பாதியில் கதையை கொஞ்சமாக ஆரம்பித்துவிட்டு, நிறைய காதல், கொஞ்சம் காமெடி என அலுக்காமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதியில் தொடர்ந்து சீரியஸான சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகரிக்கிறது. 'அட.. தெரிஞ்சதுதான' என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராத டிவிஸ்ட்டை வைத்து நிமிர்ந்து உட்கார செய்கிறார். 'முடிவு என்னாக போகிறோதோ' என நாம் நினைக்கும் போதே பெரிய ரிஸ்க் எடுத்து கதையின் அஸ்திவாரத்தையே மாற்றி ஒரு கிளைமேக்ஸை தந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இரண்டாம் பாதியின் முக்கிய டிவிஸ்ட் வந்த பின்னர்தான் முதல் பாதியில் இடிக்கும் விஷயங்களை ஞாபகப்படுத்தி 'அட ஆமால்ல.. சரியாத்தான் இருக்கு' என பொருத்திப் பார்க்க முடிகிறது. இன்னும் சில இடிக்கும் லாஜிக்குகளை கிளைமேக்ஸில் ஒரு வசனத்தில் சரி செய்து கொள்கிறார்.
ஆனால் இவ்வளவு தரமான திரில்லரை கொடுத்துவிட்டு அதற்கு ஒரு தீர்வு தந்து முடித்திருந்தால் முழுதிருப்தியோடு இருந்திருக்கும். இருப்பினும் வித்யாசமான வகையாக எடுத்துக் கொண்டால் இந்த முடிவையும் என்னால் ரசிக்கவே முடிகிறது.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். ஒரே மாதிரியான மாடுலேஷேனில் ஒரே மாதிரியான வசனங்களை நியூவிலும் அ.ஆவிலும் அதிகம் வெளிப்படுத்தியிருந்தவர், இசையில் வெவ்வெறு உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்த துவங்கியிருக்கிறார்.

சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரியான ரோல். இவர் இல்லையென்றால் படமே இல்லை. மனிதர் வாழ்ந்திருக்கிறார். அவருடன் மிகச்சரியான இணையாக கஞ்சா கருப்பு. இருவரது காட்சிகளும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக வெகுவாக உதவியிருக்கிறது.

குளிர்ச்சியான முகவாட்டுடன் சாவித்திரி. முதல் பாதியில் வெறும் கவர்ச்சி கதாநாயகியாக வந்தாலும் இரண்டாம் பாதியில் சொதப்பாத நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒரு வடக்கத்திய நடிகை உதட்டசைவில் அக்கறை எடுத்து நடித்திருப்பதற்காகவே பாராட்டலாம்.

மருந்து கொடுக்கும் காட்சி, பாவ மன்னிப்பு காட்சி, பேக் தொலையும் காட்சி போன்ற சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இயக்குனராக அறிமுகமாகி, நடிகராக வெற்றி பெற்றவர்கள் பல பேர் உண்டு. அந்த வெற்றியுடன் நில்லாமல் அடுத்து இசையையும் கற்று அதையும் குறிப்பிடும்படியாக முதல் படத்திலேயே வெளிப்படுத்தி சாதித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு 'தன்னம்பிக்கை தளபதி' என்ற பட்டத்தை தாராளமாக தரலாம்.

Friday, January 16, 2015

ஷங்கரின்? ஐ!




முதலில் பாஸிடிவ் விஷயங்களை பார்த்துவிடுவோம். விக்ரம் உடலையும் உயிரையும் உருக்கி நடித்திருக்கிறார். பிரம்மாண்டமான செட்கள், அழகான லொக்கேஷன்கள், கண்ணில் ஒத்திக் கொள்ளும் ஒளிப்பதிவு, டிரென்டி பாடல்கள், வெளிநாட்டு பெண்ணாக இருந்தாலும் எமியின் பொருத்தமான வாயசைப்பு என  வழக்கமாக ஷங்கர் படத்தில் கைகூடி வரும் தரமான தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. ஆனால் ஷங்கர்தான் இல்லை.

சின்ன சின்ன ரோலில் வருபவர்கள் கூட சங்கர் சிமென்ட் போல காலத்திற்கும் உறுதியாய் மனதில் நிற்கும் வகையில் இருக்கும் ஷங்கரின் கதாபாத்திர தேர்வு திறன் சொதப்புவது இதுவே முதல்முறை. சுரேஷ் கோபி, கதாநாயகின் அம்மா, ஆட் ஏஜென்சி முதலாளி போன்றவர்களால் ஷங்கர் படங்களின் உயர் தரம் இதில் மிஸ்ஸிங்.

 டிவிஸ்ட்களை(!) கொண்ட முக்கிய கதாபாத்திரத்தின்  'அந்த கொழந்தையே நீங்கதான் சார்' போன்ற நடிப்பில் இரண்டு சீன்களிலேயே அவர்தான் வில்லன் என குழந்தை கூட கண்டுபிடிக்கும். குறும்பட இயக்குனர்கள் கூட இந்தா சாப்டு என டிவிஸ்ட்களுக்கே டிவிஸ்ட் வைக்கும் காலத்தில் இவ்வளவு அரதப் பழசான ஒரு டிவிஸ்ட் ஷங்கர் படத்திலா?

அவ்வளவு அழகான டாப் ரேட்டட் மாடல், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு யாருமே அவளை திருமணம் செய்ய முன்வரவில்லையாம்.. உடனே அவரது அம்மா இந்த அங்கிளை திருமணம் செய்ய சொல்கிறாராம்.. ஷங்கர் சார், இரண்டாயிரத்து பதினைந்திலா இருக்கிறீர்கள்..?

ஒரு திருநங்கை கதாபாத்திரம் வந்த உடனேயே 'புளியமரம்' பாடலை கைகொட்டி ஷங்கர் படத்திலா பாடுகிறார்கள்? வழக்கமான முக்கோண காதல், ஏமாற்றம், பழிவாங்கல் வேண்டாம் என நீங்கள் மாறுதலாய் நினைத்து ஒரு பெண்ணிற்கு பதில் திருநங்கை பாத்திரத்தை வைத்திருக்கலாம். ஆனால் அவரது காதல், சீரியசாக காண்பிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா..? விக்ரம் அவரை உதறி விட்டு வந்ததும் அவர் படுத்துக்கொண்டே அழுகையில் தியேட்டரில் எல்லோரும் சிரிக்கிறார்கள். கடைசி வரை அவர் காதலிக்கும் போர்ஷன்கள் காமெடிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறதா.. இல்லை சீரியசாக சொல்கிறீர்களா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருந்ததால், அவர் பழிவாங்க கிளம்புவது சத்தியமாக மனதில் ஒட்டவில்லை.

அடுத்த பழிவாங்கி ராம்குமார். கம்பீரமான அவரது தோற்றம், உடைகள் எல்லாமே ஓகே. ஆனால் குரல், டோன் சரியாக இருக்கிறதா..? முக்கிய இடங்களில் அவர் இழுத்து இழுத்து பேசுவது பெரும் பின்னடைவு.

இன்னுமொரு முக்கிய வில்லன், அந்த விளம்பர மாடல் ஹீரோ. அவர் இன்னும் சுத்தம். அவரும் கதாநாயகியின் அம்மாவாக வருபவரும் பெண் பார்க்க வருபவரும் இஷ்டம் போல இந்தியில் பேச, கொஞ்சம் கூட சின்க் ஆக்க கஷ்டப்படாமல் தமிழில் டப்பிங் பேசி இருக்கிறீர்கள். ஒருவேளை பாலிவுட்டுக்கு பயன்படட்டும் என விட்டீர்களோ என்னவோ.. ஷங்கர் படம் பார்க்கிறோமா அல்லது பாலிமர் சேனலில் டப்பிங் சீரியல் பார்க்கிறோமா என்பது போல் இருந்தது.

ஷங்கருடன் ஏ.ஆர் என்றால் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும்..? ஜெ.மே துவங்கி எந்திரன் வரை ஒவ்வொரு படத்தின் இசையும் சீன் பை சீன் மனப்பாடமாய் மனதில் இருக்கிறது. ஆனால் 'ஐ'யில்.. ?

வேறு மாடல் வேண்டும் என்கிற நிலையில் லோக்கல் விளம்பரங்களில் நடிக்கும் நடிப்பே வராத விக்ரமை பிடித்துக் கொண்டு அவருக்காக காதலிப்பது போல நடிக்கும் அளவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம்தான் எமிக்கு என்ன..  அவரது லைனில் நடிக்க தெரிந்த வேறு ஆணழகர்களே இருக்க மாட்டார்களா?

உருவ அவலட்சணங்களை குரூரமாக கிண்டல் செய்து ஒரு காமெடி டிராக் ஷங்கர் படத்திலா? பிரம்மாண்டங்களின் ரசிகர் நீங்கள். அதற்காக இவற்றையும் பிரம்மாண்டமாக்கி அதையும் காமெடி செய்கிறேன் என புண்படுத்தி.. சாரி சார்.. இவ்வகையில் எந்திரன் உங்கள் கனவு என்றால், 'ஐ' கெட்ட கனவு!

விக்ரம் - படத்தின் பிளஸ் பாயின்ட். மைனஸ் பாயின்ட் என்னவெனில் அவர் மட்டுமே பிளஸ் பாயின்ட் என்பதுதான். முன்பு சச்சின் காலத்தில், 'நீங்க விளையாடி ஜெயிச்சா ஓ.கே. எங்களையெல்லாம் கூப்பிடாதீங்க' என்பது போல் அவருக்கு பிறகு வரும் அனைவரும் வரிசையாக அவுட் ஆகி செல்வார்கள்.  அது போல, விக்ரம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கதற கதற நடித்திருக்கிறார். என்ன பயன்.. சச்சின் செஞ்சரி... ஆனால் இந்தியா தோற்றது  கதைதான்!

ஒரு பாடலில் வெறும் நுரையுடன் வரும் ஏமி, திருநங்கை பாத்திர சித்தரிப்பு, யூடியூப் போன்ற வசனங்கள், உருக்குலைந்தவர்களை கிண்டல் செய்வது என இந்த படம் ஒரு புதிய ஜானரில் வந்திருக்கிறது.

ஆக இதை முன்னோடியாக வைத்து, இனி இது போல படம் எதுவும் வந்தால்  U சான்றிதழுக்கு மேலே U/A  அதுக்கும் மேலே A என இருந்தது போக, இனி அதுக்கும் மேலே 'I' சான்றிதழ் வழங்கலாம்.


இணைப்பு : ஷங்கரை வியக்கவும் ரசிக்கவும் தவறியதில்லை!
http://www.valaimanai.in/2012/01/blog-post_13.html
http://www.valaimanai.in/2010/10/blog-post_08.html

Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.



தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!

Thursday, October 31, 2013

ஆரம்பம் | வலைமனை



ஆரம்பம்!

காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்!

மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்!

மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார்.

ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது.

ஸ்பாய்லர் :
கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு. 

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி.
ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை  மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை.

பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார்.

என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின்  பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் இரண்டரை மணி நேர பக்கா ஆக்ஷன் ட்ரீட் இந்த ஆரம்பம் !

Friday, October 11, 2013

கிராவிட்டி (2013) - தொழில்நுட்பத்தின் சாறு




ஹீரோவின் விசேஷ உபகரணத்தின் லேசர் கதிர் பட்டு உடல்கிழிந்து பச்சை ரத்தம் பீறிட உயிர் விடும் ஏலியன்கள், பூமிக்கு மேலே சரியாக அமெரிக்க மாநகரின் மேல் நிறுத்தப்படும் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள்,  கூட்டம் கூட்டமாக செத்து மடியும் பூமிவாசிகள், ஏலியன்களை கொல்ல ஹீரோவினால் கடைசியில் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய யுக்தி...  இப்படி மலிந்துவிட்ட சயின்ஸ் பிக்ஷன் மசாலாக்களில் இருந்து தனித்து நின்று தெளிவான, சுவாரஸ்யமான தனி முத்தாக ஒளிவிடுகிறது 'கிராவிட்டி'.

ஸ்பாய்லர் :  ......................................................
முதன்முறையாக  தனது விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயோ மெடிக்கல் பொறியாளர் ரயான் ஸ்டானும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் மேட் கவால்ஸ்கியும் ஹப்பிள் டெலஸ்கோப்பில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் வேளையில் எதிர்பாராமல் விண்வெளிக்குப்பைகளால் ஏற்படும் விபத்தில் சக வீரர் உயிர் விட விண் ஓடமும் பாதிக்கப்படுகிறது. பூமியுடனான தொடர்பும் துண்டித்துப்போகிறது. 

இதன் பின்னர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஷ்டேஷனுக்கு சென்று தப்பிக்க அவர்கள் முயல்வதும், பின்னர் கவால்ஸ்கியுன் இறப்பினால் தனித்து விடப்படும் ரயான் பல்வேறு மன மற்றும் உடல் போராட்டங்களை சமாளித்து பூமிக்கு திரும்பி கிராவிட்டியை சுவைப்பதே படம்.
......................................................

நேற்று மாலை S2 பெரம்பூரில் 3D - டால்பி அட்மாஸ் வசதி செய்யப்பட்ட ஸ்கிரீனில் பார்த்தேன்.  90 நிமிடங்கள். நாம் விண்வெளியில் மிதக்கிறோம். சுழல்கிறோம். விண்வெளிக்குப்பைகளால் தாக்கப்படுகிறோம். பூமி நமக்கெதிரே சுழல்கிறது. அண்டம் நமக்கெதிரே விரிந்து கிடக்கிறது. பிரபஞ்சத்தின் படைப்பும், கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்டதன் அடையாளமே தெரியாமல் துல்லியமான நிஜ காட்சிகளாய் படைக்கும் திறன் பெற்றுவிட்ட மனிதனின் ஆற்றலும் ஒன்றுசேர்ந்து பரவசப்படுத்துகிறது.

3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரிய பலம்.  பூமியின் விளம்பில் பட்டு தெரிக்கும் ரம்மியான ஒளிக்கதிர்கள், பேனா,  புத்தகங்கள், நெருப்புக்குமிழி, கண்ணீர்த்துளி, பிரபஞ்ச வெளியில் மிதக்கும் வீரர்கள் என வெறும் திரைப்படம் என சொல்லிவிட முடியாதபடி ஒரு பிரமிப்பான அனுபவமாக உணர வைக்கிறது. இதனுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பமும் கைகோர்த்துக்கொள்ள மொத்தத்தில் அருமையான விருந்து.

தாகம் எடுத்த வேளை நல்ல பழச்சாறின் சுவையில் மெய்மறப்பதை போன்று, தொழில்நுட்பத்தின் சுவைமிகுந்த சாறினை ருசிக்க நல்ல ஒளி ஒலி அமைப்புள்ள திரையரங்கில் பாருங்கள். மகிழுங்கள்.

Sunday, March 17, 2013

பரதேசி - வத்திக்குச்சி | வலைமனை


எஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான  திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.

இயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்கு மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.

அஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த  அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால்  அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.

இன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.

பாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங்  சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.

ஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக  கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.

அப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.

கடந்த நூற்றாண்டின்  முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும்  சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.


பீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.


பாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.

Friday, February 1, 2013

உப்பில்லா கடல்




எம்.டி.வி அன்பிளக்ட் நிகழ்ச்சியில் முதன்முதலாக கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே பாடலை இசைத்தபொழுது ஏ.ஆர்.ரஹ்மான் முகத்தை பார்த்திருக்கிறீர்களா...? அதில் அப்படியொரு பரவசம் இருந்தது. அந்தப் பாடலை கேட்பவர்களையும் அத்தகைய நிலைக்கு கொண்டு செல்லும் வீரியமிக்க இசை!

வழக்கமாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், மணிரத்னம் கையில் பட்டவுடன் இன்னும் மெருகேறும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் காட்சியமைப்பில், புதிய சுவையோடு பரவசப்படுத்தும். 

ஆனால் இந்தப் படத்தில் குழந்தை பருவத்தில் இருக்கும் குதூகலம் மறைந்து  வாலிப வயதுகளில் சம்பிரதாயத்துக்காக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பது போன்ற மனப்பான்மையில் பாடல்களை எடுத்ததுபோல் இருக்கிறது. 

'நெஞ்சுக்குள்ளே'யெல்லாம் ஏதோ பாட்டு போட்டுட்டாங்களே என அடித்து விடப்பட்டிருக்கிறது. 'அடியே' பாடல் மானாட மயிலாட ரகம்.  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்த சர்ச் சாங்.. அட போங்க பாஸ்.

பாடல்கள்தான் இப்படி என்றால் படம் மொத்தமாக அதற்கும் மேல். என்ன சொல்ல வருகிறார்கள், என்னதான் கதை என தலையை சொறிந்துகொண்டே வெளிவர வேண்டியதாக இருக்கிறது. 

டைட்டிலுக்கு முன்னதான 7 நிமிட காட்சியில் அசர வைக்கும் அர்ஜுன், ஆயுத எழுத்து பாரதிராஜா போல பரிணமிக்கப்போகிறார் என எதிர்பார்த்தால், அவரை ஒரு சராசரி தமிழ் வில்லன் அளவிற்கு கூட  பயன்படுத்தாதது ஏமாற்றம்.

அரவிந்த்சாமியின் கேரக்டரை நன்றாக கட்டமைத்துக்கொண்டே வந்து பட்டென அவரை ஜெயிலில் போட்டதும் என் ஸ்டேஷன் வந்துடுச்சு என இறங்கிக்கொள்வது போல் அவர் கதை அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர் சாவகாசமாய் இன்டெர்வெல் எல்லாம் முடிந்து எப்போயோ வருகிறார். வந்தும் அவரது அறிமுக காட்சிகளுக்கு உண்டான நியாயத்தை அவர் பாத்திரம் ஈடு செய்ய வில்லை. இடையில் நிறைய கவுதம் கொஞ்சம் துளசி. அப்புறம் நடுவுல நடுவுல மக்கா சொக்கா எல்லாம் போட்டுக்கனும்.

துண்டு துண்டாக பார்த்தால் படத்தின் காட்சியமைப்புகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அர்ஜுன் அரவிந்த்சாமியின் ஆரம்ப கட்ட மோதல், அரவிந்த்சாமி கவுதமை மெருகேற்றுதல், கவுதம் ஞானஸ்தானம் பெறுதல், அரவிந்த்சாமி மீது பழிசுமத்தப்படுவது, அர்ஜுனிடம் கவுதம் சேருவது, துளசி கவுதம் காதல், கவுதம் திருந்துவது, கிளைமேக்ஸ் கப்பல் என சிறப்பான எபிசோட்களாக படம் துண்டு துண்டாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து  பார்க்கையில், ஒரு முழுப்படமாக கோர்வையாய் மனதில் பதிய மறுக்கிறது கடல். அதிலும் மணிரத்னம் படம் என நினைத்துக்கொண்டே திரையரங்கை விட்டு வரும்பொழுது மிச்சம் இருப்பது பார்க்கிங் டோக்கனும் ஏமாற்ற உணர்வும்தான்.

கடல் - அழகிய தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சுவையில்லா உணவு
____________________________________________________

பின்குறிப்பு : ராவணன் படத்தையே ரசித்து பார்த்து எழுதியவன் நான்
http://www.valaimanai.in/2010/06/blog-post_19.html


Tuesday, March 20, 2012

வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்



"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..."  என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வருட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.

என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.

படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.

சிவாஜி அறிமுகத்திற்கு கைதட்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.

முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்ட் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம்.   மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதிலாக இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்!  தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.

"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.."  எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை தந்தது.

Friday, January 13, 2012

நண்பன் இஸ் வெல்





காதல்,  கதையின் மையக்கருவாக இல்லாத படங்கள் தமிழில் குறைவு. அதிலும் ஃபீல் குட் வகை படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து காட்சி ஊடகங்களில் நேரத்தை அதிகம் செலவிடும் காலகட்டத்தில் ஒரு சினிமா, அதுவும் ஒரு தமிழ் சினிமாவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஒரு குற்றத்தை கிரியேட்டிவ்வாக புதிய முறையில் செய்யலாம் என்பதையே நாம் கற்க முடியும்.

ஒரு ஹீரோ, ரெண்டு ஹீரோயின், வில்லன் அப்புறம் கிளைமாக்ஸ் இடையிடையே பாடல்கள் என்கிற உருப்படாத திரை இலக்கணத்தை மீறி தமிழில் படங்கள் வருவது அரிது. அதிலும் அப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹிட் ஆவது அதனினும் அரிது.

இவ்வாறான நிலையில் வெற்று இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ஒரு படத்தை கொடுக்க முதன்முறையாக ஷங்கரும், மாஸ் ஹீரோவான விஜய்யும் முன்வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.

தற்போதைய கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்தும் அது மாணவர்களின் பால் உண்டாக்கும் தாக்கத்தையும், இதற்கான மாற்று வழிகளையும் மையமாக வைத்து இன்னபிற பொழுபோக்கு சமாச்சாரங்களை சேர்த்துக்கொண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ்,  கெட்ட ஹிட் ஆகி பட்டையை கிளப்பிய படம். இன்று சீனாவில் கூட பல கல்லூரிகள் 3 இடியட்ஸ் படத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன என்றால் அக்கதையின் வலு குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

அப்படியாகப்பட்ட டபுள் ஸ்டராங் கருத்துள்ள, படு சுவாரஸ்யமான நடையில் செல்லும் மெகா ஹிட்டான படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்ததற்கே ஷங்கர் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ்  பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.

தமிழக மக்கள் தொகையில் 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் சொற்ப சதவிகதத்திலேயே இருப்பார்கள் என்பதால், ஷங்கர் எடுப்பதன் மூலமும், விஜய் நடிப்பதன் மூலமும் படத்தின் அற்புதமான கருத்துக்கள் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு போய் சேரப் போகிறது குறித்து மகிழ்ச்சியே.

ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் அமீர் - விஜய், சத்யராஜ் -  இரானி, மாதவன் - ஸ்ரீகாந்த் என ஒப்பீட்டு பார்வை இல்லாமல் பார்க்க முடிந்தால் நண்பனை ரசிக்கலாம்.  3 இடியட்ஸ் பார்க்காதவர்களுக்கு அந்தப் பிரச்சினை கூட இல்லை. இந்த படம் சுவையாகவும், நல்ல பல விஷயங்களை அறியத்தரும் புத்தகமாகவும் இருக்கும். இடையிடையே இலியான இடுப்பை ரசித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

முதல் நாள் காட்சி -  சென்னை ஏ.ஜி.எஸ் திரையரங்கம்.




■  காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக சமயங்களில் விஜய்யை இவ்வளவு க்யூட்டாக அமைதியாக பார்த்ததாக ஞாபகம். அப்பாடா....  ஷங்கர் யாருடனாவது இணைந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு சம்மந்தப்பட்ட நடிகரை வைத்து பிரமிப்பினை படத்தில் காட்டுவார்.   பல வருடங்கள் கழித்து அமைதியாக வரும் விஜய்யை பார்த்து நண்பனிலும் அதே பிரமிப்பு நமக்கு ஏற்படுகிறது.

ஒரு ஸ்டூடன்ட்டாக மட்டும் விஜய் கொஞ்சம் இடறுகிறார். டொக்கோமா விளம்பரத்தில் கூட செம யூத்தாக இருந்தாரே...? எது எப்படியோ... விஜய் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் எஸ்.எம்.எஸ் ஜோக்குகளே அழிந்து விடும் ஆபத்தும் உள்ளது.

■  இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல படத்தில் வெறித்தனமாக விளாசி இருப்பவர் சத்யன் ஒருவர் மட்டுமே. படத்தை தூக்கி நிறுத்துகிறார். சத்யராஜும் தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  மாணவ தோற்றத்திற்கு மூவரில் சூப்பராக ஃபிட் ஆகிறவர் ஜீவா மட்டுமே. அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர்.  ஸ்ரீகாந்திற்கு இது டூ ஆர் டை மேட்ச் மாதிரி. திரையுலகில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் இந்த படத்தையே நம்பி உள்ளதால், கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் சொதப்பாமல் இயன்ற அளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  நடிப்புக்கு ஆள் எடுங்கன்னா, இடுப்புக்கு ஆள் எடுத்த வகையில் இலியானாவும் இருக்கிறார். பாவம் நெஞ்செலும்புகள் தெரிகிறது.  சிவாஜியில் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஷங்கர் ஹீரோயினை மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது அக்காவாக வந்த அனுஹ்யாவே அவரை விட எனக்கு அழகாகத்தான் தெரிந்தார். சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் லூஸ்ல விடுங்க.

உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) எந்திரன் படத்திற்கு பின்னர் ஷங்கர் ஒரு ரீமேக் படம் செய்திருக்கிறார்.  அதுவும் கொஞ்சம் கூட மாற்றாமல் அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்புகள்.  தன்னை பாதித்த ஒரு பாசிட்டிவ், ஃபீல் குட் படத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என தனது அத்தனை இமேஜுகளையும் மறந்து விட்டு நண்பன் தந்திருக்கும் இயக்குனர் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!






Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai